டெல்லி: ஜே.என்.யூ. பல்கலைக்கழக வளாகத்தில் கொடூரமாக தாக்கப்பட்ட மாணவ சங்கத் தலைவியை திமுக மக்களவை உறுப்பினர் சந்தித்து ஆறுதல் கூறினார்.
டெல்லி ஜவர்ஹர்லால் பல்கலைக்கழகத்தில் இடதுசாரி, தலித் மாணவ அமைப்புகளை முடக்கும் வகையில் அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தற்போது தீவிரம் அடைந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில், பல்கலைக்கழகத்தின் பெண்கள் தங்கும் சபர்மதி விடுத்திக்குள் நுழைந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள் ஆயுதங்களை கொண்டு கொடுமையாக தாக்கியுள்ளனர். இதில் மாணவர் சங்கத் தலைவர் ஆயிஷி கோஷ் உள்பட பலர் படுகாயமடைந்தனர்.
பாஜக மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) இந்த தாக்குதலை நடத்தியதாக ஜே.என்.யூ. மாணவர் அமைப்பும், இடதுசாரிகள் மாணவர்கள் தாக்குதல் நடத்தியதாக அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், ஜே.என்.யூ. பல்கலைக்கழக வளாகத்தில் கொடூரமாக தாக்கப்பட்ட மாணவ சங்கத் தலைவியை திமுக மக்களவை உறுப்பினர் சந்தித்தார். அப்போது அவருக்கு ஆறுதல் கூறியதுடன் சம்பவத்தன்று என்ன நடந்தது என்பது குறித்தும் கேட்டறிந்தார். அத்துடன் தாக்குதலுக்கு உள்ளான மற்ற மாணவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறிய கனிமொழி, சூறையாடப்பட்ட ஜே.என்.யூ. விடுதி வளாகத்திலும் ஆய்வு செய்தார்.